"உள்பொருளை உள்வாங்கியது"

நூல் விவரம்

நூல் பெயர்: உள்பொருளை உள்வாங்கியது
ஆசிரியர்: ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்
பதிப்பு : அய்யன் திருவள்ளுவர் ஆண்டு 2049 துலைத் திங்கள் (ஐப்பசி மாதம்) 25ம் நாள் (11.11.2018)
பக்கம்: 192
வெளியிடப்பட்ட இடம்: திருவாரூர் ஞானசபை கிளையில் நடைபெற்ற ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் 80 வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை

பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071

புகுமுன் தெரிமின்

வானுலவும் வான்மதிக்கு வளர்பிறை என்றும் தேய்பிறை என்றும் அன்று முதல் இன்று வரை சக மக்கள் கூறி வருவதைக் கேட்கின்றோம். ஆனால் வான்மதிக்கோ வளர்பிறையும் தேய்பிறையும் கிடையாதென்று ஆய்வு செய்தால் புரிந்துவிடும். வானத்தில் மிதந்து செல்லும் கோள்களின் சுழற்சியின் காரணமாகவன்றோ இவ்வாறு காட்சி கிடைக்கிறது. பாரெங்கும் ஒளி உமிழும் பகலவனோ கிழக்கே உதித்து மேற்கே அடைகிறது என்று பாரிலுள்ள பலர் கூறினாலும் இருட்கதவை உடைத்தெறியும் எழுஞாயிறு உதிப்பதுமில்லை மேற்கே அடைவதுமில்லை என்று ஆய்வு செய்யும் ஆன்றோர்கள் உணர்ந்திடுவர் பூமிப்பந்தின் சுழற்சி காரணமாகத்தான் கிழக்கே உதித்து மேற்கே அடைவது போல் காட்சி கிடைக்கிறது. அவனோ எப்போதும் ஒளியை கொடுப்பதினால் பகலவன் என்று பாரிலுள்ளோர் புகழ்ந்திடுவர் வானவெளி தன்னில் அபூர்வமாக காட்சி கொடுக்கும் வானவில்லுக்கோ அரைவட்டம் என்பது எல்லோரும் கூறீடும் கூற்றுத்தான் ஆனால் வானவில் தோன்றுங்கால் வானவூர்தியில் பயணம் செய்தால் முழு வட்டமாகவல்லோ தெரியும் இதையும்அறிந்தோர் உணர்ந்திடுவர் இப்படியே எழுதிக் கொண்டே போகலாம். இதனால் அன்றோ கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று முன்னோர்கள் கூறினார்கள் போலும்.
புறவிழி நோக்காலும் விஷய அறிவாலும் நிகழ்ந்திடும் இந்த நிகழ்வுகளுக்கே எவ்வளவு தடுமாற்றம் ஏற்படுகிறது. பின்னர் தெளிந்தோரிடம் தெரியக் கேட்டுச் சிந்தித்த பின்தானே தெளிவான நிலை கிடைக்கின்றது. உள்பொருளை உள்வாங்கியது என்று இந்நூலுக்கு பெயர் இட்டு புற உலகில் நம்மை திகைக்க வைக்கும் நிகழ்வுகளை எழுதக் காரணம் குறளாசான் கூற்றுப்படி அறிதோறு அறியாமை கண்டற்றால் என்பதே அதாவது நாம் அறிய அறியத்தான் நமது அறியாமை விளங்குமாம் அறியாத பொருளின் கருத்தைத் அறிய அறியத்தான் நமது அறியாமை விளங்கும் என்பதற்கே. இன்றோ மனித ஆயுளை தவணை முறையில் நீடிக்க வைக்க நவீன மருத்துவத்தில் மகத்தான முறைகளில் புதுமை பல கண்டாலும் மனித உடலில் உள்ளிருக்கும் நுண்ணிய பாகங்களை கண்டறிந்து இயந்திரங்களில் பழுதான பாகங்களை அகற்றி புதியவை பொருத்தி மீண்டும் இயக்குவது போல் புதுமை பல கண்டாலும் இந்த உடல் தேக சஞ்சாரமும் தேசசஞ்சாரமும் செய்யும் காலம் மட்டும் இந்த உயிர் எங்கே இருக்கிறது என்று இன்று வரை அவன் காணவில்லை. மனம் இருப்பதால் தான் அவனை மனிதன் என கூறுகிறோம். அந்த மனத்தையும் இன்று வரை கண்டான் இல்லை.
01
இதுபோல் அவன் காணாததும் ஆய்வு செய்து அகப்படாததும் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அன்றுள்ள பேரான்ம பெருஞ்சுகம் கண்ட ஞானிகளும் ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்களும், உய்வடைய வந்த இந்த உயிரையும் எப்போதும் சிந்துகின்ற சிந்தையையும், சிந்தை பிறக்கும் இடத்தையும் ஆய்வு செய்து நமது உயிர் உய்வடையும் வழியினை நூல் வாயிலாகவும் அவர்களின் நுட்பமான வழியினையும், பார் போற்ற பகர்ந்துள்ளார்கள்.
உடலிலா உயிரைக் காண ஒருவர்க்கும் எட்டாதாலே உடலுளோன் அறிய என்றால் உடலெடுத்து அறிந்தோன் வேண்டும்.
என மெய்யான மெய்ஞ்ஞான வழியறிய மெய்வழி ஆண்டவரும், கூறிச்சென்றார். உடலில்லா உயிரைக் காணத்தான் முடியுமோ! அந்த உயிரை அறிய வேண்டுமாயின் தெரிய வேண்டுமாயின், உணர வேண்டுமாயின் அந்த உயிரைப் பற்றி அறிந்த, தெரிந்த உணர்ந்தவரிடம்தானே சென்று அறிந்து கொள்ள வேண்டும் என்று பாமரரும் புரியும் வண்ணம் பகர்ந்துள்ளதைக் காணீரோ!
02
தன்னுயிர் தானறப் பெற்றானை
ஏனைய மன்னுயிர் எல்லாந் தொழும்,

என வள்ளுவப் பெருந்தகையும் கூறியிருப்பதை ஆய்வு செய்திடுவோம், உடல் வேறு உயிர் வேறு என பிரியக்கூடிய இந்த உயிரை உடலோடு ஐக்கியப்படுத்திக் கொண்டவர்களை உடலோடுஇந்த உயிரை ஒடுக்கம் செய்து கொண்டவர்களை அதாவது ஆதிக்கு சமமாக ஜீவ சமாதி பெற்றவர்களை மன்னுயிர்களான இந்த நிலை பெற்ற உயிர்கள் அதாவது சீவர்கள் எப்போதும் ஏத்தித்துதித்திடுவர். இருளிலிருந்து ஒளிநோக்கிச் செல்லும் ஆன்மாவின் பயணத்தில் ஆராய ஆராய அளவின்றி நம் சிற்றறிவை திகைப்பிக்கும் நிலை கொண்டவை நாம் செய்த தவப்பயனால் அருட்ப்பேராற்றலை அருளும் அருளாசான் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டும் ஞானாசான் வந்தமைவார். எங்கும் நிறைந்த பரம்பொருள் நம் அறிவுக்குள் அறிவாக நம் உயிருக்குள் உயிராகவும் இருந்து இயக்குகிறான் என்பதை ஐயம் திரிபின்றி உணர்ந்தவர்கள் உணர்த்துபவர்கள் ஞானிகள் நம் உடம்பினுள்ளேயே இறைவன் கோயில் கொண்டுள்ளான் என்பதை ஒன்றிய சிந்தையால் உணர்த்துபவர்கள் ஞானிகள். நாம் பெற்றுள்ள உடம்பு ஒருபொறியியல் எந்திரத்தை ஒத்தது என்பர். மாயா இயந்திர தனு என அழகுதமிழில் குறிப்பிடுவார் சைவ ஞானி மெய்கண்டார்.
03
புறத்தே உள்ள மின் ஆற்றலைக் கொண்டு இயங்குகிறது கணிப்பொறி எந்திரம் அஃது தன்னுள் பல உள்ளமைப்புகளைக் கொண்டு இயங்குவது போல் நம் உடம்பும் வான் மண்டல இறை ஆற்றலைக் கொண்டு மெய்ப்பொருள் அற்புதங்களை உணர்வதற்கு ஏற்ப நுட்பமான வடிவமைப்பு கொண்டது. அது போன்றே நம் உடம்பும் எலும்பு நரம்பு தசைகளாலும் குருதி ஓட்டத்தாலும் பிறவாறும் இறைவனின் திருவுருவங்கள் அருவுருவமாக காட்சியளிக்க உதவுகின்றன. நமது தேகமோ ஓர் அற்புதப்படைப்பென்பர் இதை உலகியல் சிற்றின்பத்துக்கு மட்டும் உதவுவதாக பிழைபட பலர் எண்ணுகின்றனர். ஆனால் அருளாசான் அருளும் பேரின்பத்தை இப்பூவுலகத்திலேயே நுகர்வதற்கு நல்லதோர் கருவியாக உள்ளது என்பதை பலர் அறிகிலர். யாரோ சிலர் மட்டுமே அறிந்து உணர்ந்து ஆனந்தப்படுகின்றனர். ஞானிகளின் அகவழி பாட்டில் அவர்தம் சுழுமுனை நாடியே முதுகந் தண்டே வில் வடிவில் கருவறையாகிறது. கடுந்தவத்தாலே சிரசினுள்ளும் பெருமூளையின் மையத்தில் லிங்கவடிவமாய் தியான மூர்த்தியாக இருப்பதையும் தன்னில் தானே உணர்கிறான் இந்த ஏகாந்தமான தரிசனமே உச்சிக்குழியான கருவறைக்கான கோபுரமாக உச்சி வாயிலாக விளங்குகிறது.
04
அவையே நம்உடம்பினுள் பரத்தை சூழ்ந்துள்ள அருட்சக்தியின் ஆளுமைக் களங்கள் என்பதை அறிந்துணர்வான். தூங்காமல் தூங்கி சுகம் பெற்று இந்த உயிர் உதித்த இடத்திலே ஒடுங்கி நிலை பெறுவதையும், ஆதிக்குச் சமமான சமாதி நிலை பேற்றினையும் அடைந்து மீண்டும் பிறவாப் பேரின்ப நிலை அடைகின்றான். இத்தகைய அமைப்பு இறைவன் ஆன்மாக்களாகிய நம்பால் கொண்டுள்ள அளப்பரிய கருணையின் வெளிப்பாடு என்பதை நாம் இடையறாது நினைவிற் கொண்டு நன்றி பாராட்டுதல் வேண்டும். திருவருள் துணை கொண்டு மேல் முகமாக நோக்கினால் படிப்படியாக அத்துணை இறைமைக் காட்சிகளும் புலப்பட்டு இறுதியில் பஞ்ச கோசமும் கடந்து பாழையும் தள்ளி உள்ளில் நெஞ்சமும் நழுவி ஒன்றா நின்ற பூரணமான கோபுர தரிசனமும் உள்ளத்து உணர்வுகளும் வெளித் தோன்றி சித்திப்பது உறுதி பொறுமை, ஆர்வம், பயிற்சி, முயற்சி இறையருள் யாவும் உள்ளோர்க்குச் சிரசினுள் கோபுர தரிசனம் எளிது என்பது திண்ணம் ஆன்ம சொரூப தரிசனத்தை இவ்வாறு எழுதப்படுகிறது. கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம் என்னும் போது “கோடி” என்பதற்கு இரண்டு வீதமாக பொருள் கூறலாம்.
05
இறுதி, கடைசி என்பது ஒரு பொருள் மற்றது எண்ணிக்கையின் மிகுதியாகும். முத்திப்பேறு” என்பது வாழ்வின் இறுதிக்கட்டம் ஆகவே கோபுர தரிசனம் என்பது ஆன்மாவுக்கு இறுதிப் புண்ணியம் தரவல்லது என்பது பொருள். சிரசிலுள்ள கோபுரங்களை உள்முகமாகவே தரிசிக்க வேண்டுமானால் செந்நெறியில் நின்று நன்நெறி பயின்று படிமுறை ஆன்ம வளர்ச்சி பெறல் வேண்டும். முறுக வாங்கி கடைய முன் நிற்குமே என்று “அப்பரடிகளும் இதனையே கூறுவார் பிணிப்புகள் தளர்வுற்ற நிலையில் அகநோக்காக உற்று நோக்கினால் அங்கே “திருவுரு” தெரியவரும், மூலாதாரத்தில் இவ்வாறு மடைமாற்றம் நிகழ்வதை நினைந்துதான் முறுக வாங்கி கடையுமாறு அப்பரடிகளும் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்தினார் எனலாம். ஞானிகள் மூலம் ஞானாக்கினியை பெற்றவர் மட்டுமே மெய் அருள் கனலைப் பெற்றவர் என்றும் ஞான யாகத்திற்கு ஞானாக்கினியை ஆகுதியாகப் படைக்கப்படுகிறது என்றும் மறைகள், ஆகமங்கள் யாவும் சிறப்பு வாய்ந்தது என்று கூறுவதையும் அனுபவத்தால் உணரலாம். எண்ணிய எண்ணமெல்லாம் வாய் மொழியால் வரும் வார்த்தைகள் எல்லாம் மெய்யால் செய்யப்படும் செயல்கள் யாவும் நல்லதே எண்ணி, நல்லதே பேசிநல்லதே செய்தால் நல்லதே நடக்கும்
06
என்பதும் இந்த ஞானம் மட்டுமே சுத்த சன்மார்க்க வழியை நல்குவதும் அன்றும், இன்றும், என்றும் இந்த ஞானமே மனமோ விருத்திகளால் விரவி ஓடும் இயல்புடையது நிவிருத்தி எனும் சொல் உள்ளுக்குள் இழுத்துக் கொள்வதை குறிக்கும் பிரவிருத்தி என்பது வெளியே விரிவதைக் குறிக்கும் மனமோ பிரவிருத்திகளால் உலக விவகாரங்களில் ஈடுபடும் நிவிருத்தி என்றால் ஆத்மாவிடம் சென்று ஒடுங்கும் மனதிற்கு இந்த இரண்டு தொழில்கள் மட்டுமே தெரியும் மனதை வெளியே விட்டால் “மாயை” கவிழ்த்துப் போடும் மனதை உள்ளுக்குள் ஒடுக்கினால் ஆத்மாவிடம் சென்று கரைந்து போகும் ஆன்மீக ஞானயாத்திரையில் பயணிக்கும் நீரோ நிவிருத்தி என்கிற மனதை ஒடுக்கும் வித்தையைக் கைகொள்ள வேண்டும். உலகில் சகல சமயங்களும் இந்த வழியைத்தான் போதித்து வருகின்றன ஆனால் யாவரும் செய்ய முடியாத அசாதாரணச் செயல்களைச் சாதரணமாகச் செய்து காட்டும் சித்து வேலை செய்து சக மக்களை மயக்குவோர் அன்றும் இருந்தனர் இன்றும் இருக்கின்றனர் என்றும் அவர்களின் விந்தைகள் தொடர்ந்து வந்து மக்களை மயக்கிட்டாலும் சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது என்ற உண்மையை “தாயுமானவர்” அன்றே கூறிச் சென்றார் போலும். நடைமுறை வாழ்வில் கூட நிருபித்துக் காட்டினால் மட்டுமே நம் மனம் நம்பும். ஐந்து இந்திரியங்களுக்கும் புலனகாமலும் ஒரு வஸ்து உண்மையில் இருக்க முடியுமா? என யோசித்துப்பார்த்தால் புலனாகும் இப்பிரபஞ்சம் முழுதும் “வான்காந்த அலைகள் அதாவது Universal Magnet Force அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறது.
07
ஆனால் நமக்கோ எந்த இந்திரியங்களாலும் அதை அறிந்து கொள்ளவா முடிகிறது. ஆனாலும் சில பரிசோதனைகள் மூலம் அதை நிரூபித்துக் காட்டினால் நம்புகிறோம். உதாரணத்திற்கு வானொலி, தொலைக்காட்சி, மடிக்கணினிகள், தொடுதிரை, கைப்பேசிகள் என எழுதிக் கொண்டே போகலாம். மின்சாரத்தின் வியாபகத்தையும் அதுதேகம் மூளை எல்லாவற்றிலும் வியாபித்திருப்பதையும் நிரூபித்துக் காட்டினால் நம்புகிறோம் அல்லவா. இத்தனை இந்திரியங்களையும் அவை கிரகிக்கிர வஸ்துக்களையும் படைத்து ஒழுங்கு செய்து வைத்த ஒரு பெரிய “அறிவு” இருக்கவே செய்கிறது. அதைத்தான் “கடவுள்” என்கிறோம். மின்சாரத்தைப் போல் அதுவும் எங்கும்வியாபித்தும் நமக்குள்ளும் இருக்கிறது. இதையே “ஜீவ காந்த சக்தி” என்பர் அதாவது Bio Magnetism என்பர் ஜீவகாந்த ஆற்றல் பெற்றோர் தகுதியான மாண்புமிகு மாணவனுக்கு “ஜீவ காந்த சக்தியை உணர்த்திடுவர் இதுதானே சம்பிரதாயம் இதையெல்லாம் ஒத்துக் கொள்ளாதோர் பலருண்டு. மலரின் நறுமணமோ கண்ணுக்குப் புலப்படுமோ? ஆனால் தித்திப்பு நாவுக்குத்தான் புலனாகும் வெம்மையும் தன்மையும் தொடு உணர்ச்சி கொண்டே தோலுக்கே புலனாகும். ஆனால் இவற்றை கண்ணால் காணத்தான் முடியுமோ? இவற்றுக்கு மாறாகப் பச்சை, சிகப்பு முதலிய வர்ணங்கள் காது, மூக்கு, வாய், தோல் இவற்றுக்கு புலனாகுமோ? அந்த வர்ணங்களின் நிறமோ கண்ணுக்கு மட்டுமே புலனாகும். சங்கீதம் அதைச் சுவைக்கவோ, பார்க்கவோ முகர்ந்திடவோ, தொடவோ முடியுமா?
08
சங்கீதம் அது காது ஒன்றுக்கே புலனாகும் இருந்தாலும் சங்கீதம் என்று ஒன்று கிடையாது என்று சொல்லுவதில்லை அல்லவா? இதையெல்லாம் இங்கு எழுதுவதற்குக் காரணம் சிந்திக்க வைத்துத் தெளிவுபடுத்துவதற்கே நுண்ணறிவுக் கூர்மை வாய்க்கப் பெற்றோர் தன் ஆயுட்காலத்திற்குள் அறிவின் முடிவு காண எழுந்த அவர்தம் ஆர்வம் அறிவு ஏறஏறப் பெருகிற்று, அகத்தேடலில் எத்தனை நுண்மை பெற்றபோதும் அறிவின் முடிவு சிந்தனையின் பின் அவருக்கு ஓர் உண்மை புலனாயிற்று முடிவு என்பது தொடக்கத்தின் ஆரம்பமே எனும் பேருண்மை புலனாகியதும் அவர் அகமகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடினர். புள்ளி ஒன்றிலிருந்து ஆரம்பமாகும் கோடு எவ்வளவு நீட்டிக் கொண்டே செல்லினும் முடிவுதான் ஏற்படுமோ? ஏற்படாது. நீண்டு சென்ற அக்கோட்டின் முனை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட அப்புள்ளியை தொட கோட்டுக்கு முடிவு ஏற்படும். இவ்வுண்மை உணர்ந்த அகத்தாய்வு செய்த அவ்வறிஞர்கள் அறிவின் தொடக்கம் எது என்பது பற்றி மேலும் நுட்பமாக ஆய்வு செய்தனர் மேலும் மேலும் தேடித் தேடி உட்சென்று அகத்தேடுதலின் ஓர் நிலையில் ஆன்ம தரிசனம் நிகழ்ந்தது மெல்ல மெல்ல இறைதரிசனம் கிட்டியது இந்த அகத்தேடலின் இறுதிப் பயனாய் இறையுணர்வே அறிவின் மூலம் என்றுணர்ந்தனர் அச்செயலிழப்பில்”மோனநிலை” மெல்லக் கூடி வந்ததை உணர்ந்தனர். அதனால் அஞ்ஞானம் மெல்ல மெல்ல அகன்றிட “ஞானம் வாய்த்ததாம்” பின்னரே சும்மாஇருக்கும் சுகம் கண்டு சொக்கி மகிழ்ந்தனர் இவை எல்லாம் “உள் பொருளை உள்வாங்கியதின் விளைவு தானே வெளியே தேடினால் இந்நிலை கிட்டிடுமோ? கிட்டாதல்லவா! சதா ஞானானந்த சுகத்தில் இருந்திடுவோர் ஒன்றை நோக்க மற்றொன்றின் மேல் பிரியம் வந்தாலும் முடிவில் ஆன்மாவிடமே சுகித்திடுவர். ஆத்மாவின் கண் தனது பிரியம் நீங்காமையினால் அச்சுகமே ஆத்மானந்தம் என துணிந்து கூறலாம்.
09
வான் பொருள் உலகெலாம் மனதிடை ஆக்கவல்ல ஊன் பொருள் உன்னுள் உண்டு. என்பது தானே பேரான்ம பெருஞ்சுகம் கண்டவர்களின் கூற்று அருளறிவால் ஆவதை அறிந்துணரும் ஆற்றல் பெற்றோரே நிறை மொழி மாந்தராவர் அவர்கள் உள்ளத்தெழும் கருத்துக்களே அறிவுக் கருவூலம் என துணிந்து கூறலாம். நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து மறை மொழி காட்டி விடும். என குவலயம் போற்றக் கூறிய குறளாசான் கூற்று இன்று வரை மாறாத கருத்தல்லவா. அப்படிப்பட்ட அறவழி செல்லும் பாங்கும் கைவல்லிய நவநீதம் தந்த “தாண்டவமூர்த்தி” சுவாமிகளின் பாயிரத்தின் கருத்தும் உலகப் பொதுமறையாத்த “வள்ளுவப் பெருந்தகையின் பாயிரத்தின் பாங்கும் எப்படி ஒத்துப் போகிறது என்பதையும் இந்நூலில் பதிவு செய்துள்ளோம். கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை திருக்குறள் – 9. மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகள் இருந்தும் அவைகள் இயங்கவில்லையானால் என்ன நிலை ஏற்படும்? அது போல்தான் இறையுணர்வும் அறநெறியும் உணர்ந்த வல்ல குருபிரானை துணைக் கொள்ளவில்லை என்றால் ஒருவரது இந்திரியங்களும் அவற்றால் ஆற்றும் செயல்களும் பயன்படாது. சிவநேசச் செல்வரான அப்பரடிகளும் இறைவனுக்கோ குணமேது குறியேது என ஒப்புடையனல்லன், ஓருருவனல்லன், ஓர் ஊரனல்லன், உவமையில்லன், அப்படியன் அவ்வுருவன் அவ்வண்ணத்தன் என்றும் இப்படியன், இவ்வுருவன், இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே என்றும் ஏன் கூறினார் என்பதையே சிந்திக்க வேண்டும். வள்ளுவப் பெருந்தகை “எண் குணத்தான்” என்ற வார்த்தையை ஏன் போட்டார் என சற்று ஆய்வு செய்திட்டால் விளங்கிவிடும்.
10
1. தன் வயத்தவன் – பொறிபுலன்களை தன்வயப்படுத்துதல் 2. தூய உடம்பினன் – மனமொழி மெய்யால் தூய்மை 3. இயற்கை உணர்வினனாதல் – இயற்கையோடு ஆற்றும் அறிவு4. முற்றும் உணர்தல் – மெய்யுணர்வை உணர்தல் 5. பாசங்களிலிருந்து நீங்குதல் – அகப்பற்றும் புறப்பற்றும் நீங்கிய இடம் 6. பேரருளுடைமை – இமையா நாட்ட பேருணர்வு 7. எல்லையில்லாஆற்றல் – எல்லையில்லா பேரின்பம் 8. வரம்பினில் இன்பம் -பல்கலை அறியும் ஆற்றல் இந்த “எண் குணங்களும்” பேரானந்தப் பெரு வெள்ளத்தில் நீந்தச் செய்யும் ஆசானுக்கும் இருக்க வேண்டும். அவரின் அடிதொழுது கற்கும் மாண்புடைய மாணவனுக்கும் இருக்க வேண்டும். மாணவனுக்கும் இந்த எண் குணங்களும் இருந்தால்தான் பேரின்பத்தை அடைந்து மீண்டும் பிறவாப் பெருவாழ்வு அடைய முடியும் என்பதே குறளாசான் கருத்தாகும் என்பதை அறிந்திடுவீர். பேரான்ம பெருஞ்சுகத்தை நல்கிடும் அருளாசானுக்கே அந்த “எண்குணம்” என்பதை நினைவில் கொள்ளீர். இனி கைவல்லியநவநீதம் யாத்த தாண்டவ மூர்த்தி சுவாமிகளின் நூலின் “பாயிரம்” மூன்றாம் பாடலினை ஆய்வு செய்திடுவோம்.
எவருடைய அருளால் யானே எங்குமாம் பிரமம்; என்பால்
கவருடைப் புவனம் எல்லாம் கற்பிதம் என்று அறிந்து சுவரிடைவெளிபோல் யான் என் சொரூப சுபாவம் ஆனேன் அவருடைப் பதும பாதம் அனுதினம் பணிகின்றேனே.

மாண்புடைய மாணவன் குருவையே இறைவன் என்று வணங்கினான் என்றால் இந்த ஏக நாயகனாகிய பரமான்மா இந்த உலக உற்பத்திக்கு முன்னாலே இருப்பதால் தனக்கு உபதேசித்த குருவை வணங்கினான். இந்த உடம்பினுள் இருக்கும் சீவாத்மாவைப் போலவே இதற்கு முன் எடுத்த அநேக உடம்புகளிலும் சீவாத்மா இருந்தது. ஆனால் இந்த சீவனுக்கு மோட்சம் கிடைக்கவில்லை இந்த சீவன் செய்த புண்ணியத்தால் ஒரு சற்குருவை சந்தித்து, நீ புறத்திலே தேடுகிற ஆன்மா உன் உடம்புக்குள்ளேயே “அறிவு” சொரூபமாக இருக்கிறது. அதை விசாரித்து தரிசிப்பதுதான் “ஆன்ம தரிசனம்” ஆகும் என்று மறைகளும் முழங்குகிறது.
11
உலகப் பொதுமறையான திருக்குறள் “பாயிரம்” கடவுள் வாழ்த்தும், வேதாந்த நூலான “கைவல்லிய நவநீதம்” பாயிரம் பாடல்களும் பேரான்ம ஞானிகளின் அருமை பெருமைகளையும் அவர்களைச் சார்ந்து அவர்களின் அருட்பேராற்றலைப் பெற்றவர் மட்டுமே அவர்களைப் போல் பிறப்பிறப்பற்ற பெருநிலையை அடையமுடியும் என்பதையும் “உள்பொருள் உள்வாங்கியது” என்ற இந்நூலில் பதிவு செய்துள்ளோம். நீ இந்த தேகத்திற்கு உள்ளிருக்கும் சீவனை அறிந்துணர்ந்தால் நீயும் சிவமாகி விடுவாய் என்ற சைவ சித்தாந்தம் கூறியதும், நீ ஆசான் மூலம் “பிரம்மத்தை அறிந்துணர்ந்தால் பிரம்மமாகவே ஆகிவிடுவாய்!” என்ற வேதாந்த கருத்தான அத்துவைதானந்த சுகத்தை அடைந்திடலாம் என்பதையும் பதிவு செய்துள்ளோம். அங்கே நாம ரூபமே கிடையாதென்பதால் “நாமரூப நாட்டம் விடின் நமது சொரூபம் தோன்றிவிடும்” என்ற உண்மையை அனுபவத்தில் மட்டுமே அறிந்துணர முடியும் என்பதையும் பதிவு செய்துள்ளோம். பிரம்மத்தை அறிந்துணர பிரம்மஞானம் பெற்றவர் துணை வேண்டும் என்பதையும் ஒரு ஞான தீபத்தில் இருந்துதான் இன்னொரு ஞான தீபத்தை ஏற்ற முடியும் என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளோம். நீரானது உடலைத் தூயதாக்குவது போன்று பிரம்மஞானம் மனிதனைத் தூயவனாக்குகிறது பிரம்மஞானி தானே பிரம்மம் ஆகிறபடியால் தூய்மை தருதலில் இது தலைச்சிறந்தது பிரம்மஞானம் பெற்றபின் பிறவிப் பெருங்கடலில் அவனுக்கு உண்டாகும் துன்பத்தையெல்லாம் அது துடைத்துத் தள்ளுகிறது ஞானத்தை அடைந்தவனுக்கு தன் சொரூபமாகிய பேரானந்தம் கிட்டுகிறது. மனிதனுக்கு சர்வதுக்க நிவர்த்தி செய்வது பரஞானம். வாயு முதலிய நான்கு பூதங்கள் ஆகாசத்தில் நிலைத்திருந்தாலும் அதில்அவைகள் ஒட்டுவதில்லை. ஒரு மாறுதலையும் உண்டு பண்ணுவதும் இல்லை.
12
பிரம்மத்தில் நிலைத்திருந்தால் ஒரு விகாரத்தையும் உண்டு பண்ணுவதும் இல்லை. பிரம்மஞானம் அஞ்ஞானங்களைக் கடந்து, பாப புண்ணியங்களைக் கடந்து தர்ம அதர்மங்களையெல்லாம் கடந்தது எனலாம் சுத்த அசுத்தங்களைக் கடந்தது எனலாம். பிரம்மம் மாசற்றது மூன்று குணங்களும் அதில் இருந்தாலும் அதனால் பாதிக்கப்படுவதில்லை. இந்நூல் ஆரம்ப அப்பியாசிகளுக்காக எழுதப்பட்ட நூல் அல்ல. பயிற்சிகளில் முயற்சியோடு முழுமை அடைய விரும்புவோருக்காக எழுதப்பட்ட நூல் என துணிந்து கூறலாம். ஆதலால் “உள்பொருளை உள்வாங்கியது என்ற இந்நூல் இல்பொருளைப் பற்றியோ வெளி பொருட்கள் பற்றியோ அதிகம் எழுதப்படவில்லை. அனுபவங்களின் தொகுப்பே மறைகளின் மொத்த சாராம்சம் என்பதுதான் நூலின் கருத்து, ஆன்றோர்கள் அனுபவ வாயிலாக உள்வாங்கிய கருத்துக்களையும் சில ஆங்கில கருத்துக்களையும் பதிவு செய்துள்ளோம். அதில் புலமை பெற்றோர் அறிந்து கொள்ளலாம். உலகில் யாரும் மேதைகளாக பிறப்பதில்லை அப்படியே மேதைகளாகப் பிறந்தாலும் இயேசு பிரானுக்கு ஒரு யோவான் ஸ்னானகன் என்ற குருபிரான்தான் தெய்வீக ஆற்றல்களை உணர்த்தி அவரை உயர்த்துகிறார் என்பது யாவரும் அறிந்ததுதான் இன்றைய மாணவனே நாளைய ஆசிரியர் ஆகிறார். ஆதலால் மாண்புடைய மாணவர்கள் தங்களின் தகுதியை உயர்த்தி ஆசான் ஆவதற்கு துணை புரியும் இந்நூல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என அய்யன் பகர்ந்தாலும் இந்த பிரம்ம ஞானக் கல்வி” கூட மேட்டுக்குடி வாசிகளிடம் சிக்கித் தவிப்பதையும் எம்மால் கூறாமல் இருக்க முடியவில்லை.
13
தித்திக்கும் பலாவோவேர்களிலும் நடு மரங்களிலும் கிளைகளிலும் மரத்தின் மேல் நுனிகளிலும் காய்த்துக் கனி கொடுக்கும் இந்தரையில் வாழும் மாந்தர் இறைவனின்தலையின் மீதும் தோளின் மீதும் வயிற்றின் மீதும் காலின் மீதும் பிறந்திடுவர் என வர்ண பேதம்காட்டுவர் எத்திக்கில் எவ்வூரில் இருந்தாலும் பலாச்சுளையின் தித்திப்பு மாறிடுமோ அது போல் தேகத்தின் உள்ளிருக்கும் தேகிக்கு சாதிமதம் கிடையாதென்று எத்திக்கும் புகழ்மணக்க கூறிடும் எல்லாச்சமய மறைகளும் அதனால் அருளறிவால் அறிந்துணர்ந்து அடிசேர் ஞானம் அடைந்திடுவீர்.
எமது மாணவ மணிகளை சிந்திக்க வைத்து செயலாற்றவே யாம் விரும்புகின்றோம். வீன் நம்பிக்கைகளை விதைத்து அறுவடை செய்ய விரும்பவில்லை யாம். இதை எம்பால் அருளை அள்ளிப்பருகியோர் உணர்வர் உணர்வோர் அறிந்து மகிழ்வர் ஞானம் என்றாலே அஞ்ஞானம் அகன்ற இடமென்று ஆன்றோர் கூறியதால் அஞ்ஞானத்தை எம்மால் முடிந்தவரை அகற்றி ஞான தீபத்தை ஏற்றுவதே எமது தொழில் எமது தேக சஞ்சாரமும், தேச சஞ்சாரமும் இப்புவியில் இருக்கு மட்டும் எமது அருட்பணியை தொடர்ந்திடுவோம் வாரீர்! வாரீர்! ஊழையும் உப்பக்கம் காண உடன் வாரீர்! உடனே வாரீர்! எம் ஊனோடும் உயிரோடும் உணர்வோடும் கலந்த எமதருமை அருட் செல்வங்களே மலர் மாலை வாடிவிடும் என நினைத்து சொல் மாலை தொடுத்து உமது பாத மலரில் வைக்கின்றேன்.
14