உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை திருநெல்வேலி கிளை

தோற்றமும் வளர்ச்சியும்

நான் 9 ஆம் ஆண்டு சென்னையில் மருத்துவ மேற்படிப்பு படித்துக் கொண்டு இருக்கும் பொழுது எனது அருட்குருநாதர் மகாகனம் தங்கசுவாமிகள் அவர்களிடம் இருந்து 05/05/1998 அன்று திருவடி தீட்சை அருளப்பெற்றேன். சென்னையில் உள்ள ஞானசபைக் கிளையில் தியான அரங்கத்தில் நடக்கும் சத்சங்கத்திலும் சமாராதனையிலும் கலந்து கொண்டு மன அமைதியும் இன்பத்தையும் வெகுவாக அனுபவித்தேன். எனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு குருநாதரின் அருளோடு 2007 ஆம் ஆண்டு நெல்லையில் எனது மருத்துவப் பணியை துவங்கினேன். அப்பொழுது நெல்லையில் எனது சக உணர்வாளர்களாக இருந்த மணிகண்டன் அவர்களும் சின்னத்துரை அவர்களும் குருநாதரின் ஆணைக்கு இணங்க எனக்கு பெரும் துணையாக இருந்தார்கள். இந்த காலகட்டத்தில் மருத்துவ விற்பன்னர்கள் மூலம் பல அன்பர்கள் நமது ஞானசபையில் இணைந்தார்கள். மாதம்தோறும் பௌர்ணமி மற்றும் மகம் உடுக்களில் திருச்செந்தூருக்கு சென்று அய்யன்பட்டி சங்கர சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் நடக்கும் சத்சங்கத்திலும் சமாராதனையிலும் கலந்து கொள்வோம். மற்ற நேரங்களில் தியானத்திலிருந்து விலகி இருப்பதாகவே உணர்ந்தேன். எனவே 2008 ஆம் ஆண்டு குருநாதரிடம் நெல்லையில் ஒரு ஞான சபை இருந்தால் நன்றாக இருக்கும். நாங்களும் தொடர்ந்து பயிற்சி செய்ய வசதியாக இருக்கும் என்று ஒரு விண்ணப்பம் வைத்தோம். குருநாதரும் மகிழ்ச்சியோடு இதற்கு இசைந்தார்கள். வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று பாளையங்கோட்டையில் உள்ள ராபியா மெடிக்கலில் வைத்து சமாராதனையும் சத்சங்கமும் இனிதே நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் எனது உயிர் நண்பர் மருத்துவர் சுப கணேஷ் அவர்கள் குருநாதரிடம் திருவடி தீட்சை அருளப்பெற்றார். அன்பு குருநாதரின் அருளால் 2014-15 ஆம் ஆண்டு நெல்லையில் பொன்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உருவானது. மருத்துவமனையில் பாண்டியன் அண்ணாச்சி தியானத்திற்காக ஒரு எண்கோணத்தை வடிவமைத்து கொடுத்தார்கள். பிற்காலங்களில் நெல்லை ஞான சபை அந்த எண்கோணத்தில் வைத்து இயங்கிக் கொண்டிருந்தது. இந்த காலகட்டத்தில் மருத்துவர் சுப கணேஷ் அவர்களின் முயற்சியால் மருத்துவர். கிருஷ்ணகுமார் உட்பட பல மருத்துவர்கள் சபையில் இணைந்தார்கள்.
மணிகண்டன் அண்ணன் அவர்கள் அவரது உறவினர்கள் பலரையும் நமது சபையில் திருவடி தீட்சை பெற்ற உறுப்பினர்களாக மாற்றினார்கள். அவர்களில் முக்கியமான பயிற்சியாளர் வள்ளி அண்ணன் ஆவார். அவர் மூலம் இணைந்தவர்தான் நெல்லை ஞானசபை பொருளாளர் விஜய்கணேஷ் அவர்கள். இந்த காலகட்டத்தில் மருத்துவர் சத்தியசீலன் அவர்களும் வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டு, நெல்லை சபையில் வந்து இணைந்தார்கள். அவரும் அவருடைய சகோதரன் மற்றும் நண்பர்களை திருவடி தீட்சை பெற்று உறுப்பினர் ஆக்கினார்கள். 2018 ஆம் ஆண்டு பிராங்க் என்ற சிறந்த நண்பர் நெல்லை சபைக்கு வந்தடைந்தார். அவர் குருநாதர் மற்றும் பாண்டியன் அண்ணாச்சியிடமும் எவ்வாறு மரியாதையாக நடக்கும் முறையை எங்களுக்கு வழி காட்டினார். எங்களுக்கும் குருநாதர் மற்றும் பாண்டியன் அண்ணாச்சிக்கும் ஒரு ஒரு பாலமாக இருந்து சிறப்பாக செயல்பட்டார். அவரது அயராத முயற்சியால் 2020 ஆம் ஆண்டு குருநாதர் நெல்லை ஞான சபைக்கு சொந்த இடமும் ஞானசபை கட்டிடமும் வேண்டும் என்று எங்களுக்கு ஆணையிட்டார். குருவின் திரு அருளால் எனது குடும்பத்தினரின் இசைவோடு 10-11-2020 அன்று ஞான சபைக்கு இடம் பத்திரப்பதிவு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பல சமாராதனைகளுக்குப் பிறகு 31-3-2022 அன்று திருநெல்வேலி ஞானசபை கட்டிட அனுமதி பெறப்பட்டது.
13/11/2022 நெல்லை ஞான சபை தியான அரங்கம் திறப்பு விழாவும் உலக அறிவார்ந்தோர் இயற்கையான சபை நிறுவனர் எங்கள் அருட்குருநாதரின் 84 ஆம் அகவை பிறந்தநாள் திருநாளும், மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்றும் மென் காற்றில் வரும் சுகமும் என்ற நூல் வெளியீட்டு விழாவும் ஆக முப்பெரும் விழாவாக சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.

ஞான சபையின் செயல்பாடுகள்

குருநாதரின் ஆணைக்கிணங்க 18-12-2022 முதல் தமிழ் மாதங்களில் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று திருக்குறள் செம்பொருள் ஆய்வு மன்றம் செவ்வனே நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த கல்வி வாழையடி வாழையாக குரு பரம்பரையாக தொடர வேண்டும் என்பதற்காக பொறுமையாக சீடர்களை வழிநடத்தி சங்கர சுவாமிகள் அவர்களுக்கும் சிறப்பாக குருபூஜை நடத்தி வருகிறார்கள். இதில் பாண்டியன் அண்ணாச்சியின் தன்னலமில்லாத உழைப்பு மிகவும் பொக்கிஷமாக போற்றி புகழப்பட வேண்டியது. இதற்கு நாம் செய்யக்கூடிய ஒரே கைமாறு என்னவென்றால் குரு காட்டிய வழியில் சென்று மேலும் பல இளம் உணர்வாளர்களை உருவாக்கி நம் அருள் குருநாதர்க்கும் பாண்டியன் அண்ணாச்சிக்கும் தோளோடு தோளாய் அவர்களை அனுதினமும் பணிந்து அனுஷ்டானங்களை அனுஷ்டிப்பது ஆகும். இன்றைய சீடன் நாளைய ஆசிரியன் என்ற நம் குருநாதரின் ஆசைக்கு இணங்க தேறிய சீடன் குருவைப் போல் இருப்பான் என்ற விவிலிய கூற்றின்படி நாம் ஒற்றுமையோடு இருந்து நம் ஞான சபையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம் குருநாதரின் அன்பிற்கும் பாண்டியன் அண்ணாச்சி அவர்களின் அர்ப்பணிப்புக்கும் நாம் செய்யக்கூடிய நன்றிக் கடனாக இருக்கும். நல்லதே நினைபோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும்! குருவே சரணம்.

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை திருநெல்வேலி - நிகழ்வுகள்

  • தினசரி அதிகாலை தியானம் காலை 5.00 மணிக்கும் மற்றும் இரவு 7.00 மணிக்கு சத்சங்கம் குருவின் திருவருளோடு நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு திருக்கூட்டம் மற்றும் சமாராதனையும் நடைபெற்று வருகின்றது.
  • பெண்களுக்கான தியானம் வியாழக்கிழமை தோறும் மாலை 4.00 மணி அளவில் நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிறுதோறும் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை திருக்குறள் செம்பொருள் ஆய்வு மன்றம் திருக்கூட்டம் நடந்து வருகின்றது.

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை திருநெல்வேலி - புகைப்படங்கள்

தொடர்புக்கு

தியான மண்டபம் - முகவரி

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை கிளை-திருநெல்வேலி தியான மண்டபம், Plot – No-4, வசந்த நகர் , குலவனிகர்புரம் , பொன்ரா மருத்துவமனை அருகில் (புதிய பேருந்து நிலையம்) திருநெல்வேலி – 627005